அப்துல் கலாம் என்ன பாஜகவின் சொத்தா? சீறும் பொன்ராஜ்
அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத்கீதை வைக்கப்பட்டதற்கு அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத்கீதை வைக்கப்பட்டதற்கு அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்துல்கலாமின் நினைவிடம் கடந்த 27ஆம் தேதி ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி அப்துல் கலாமின் நினைவிடத்தை திறந்து வைத்தார்.
அறிவியல் விஞ்ஞானியான அப்துல்கலாம் கையில் வீணை வைத்திருப்பது போன்ற சிலை அவரது நினைவிடத்தில் திறக்கப்பட்டது. மேலும் அப்துல் கலாமின் சிலை அருகே பகவத் கீதையும் வைக்கப்பட்டது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொன்ராஜ்க்கு அழைப்பில்லை
அதேநேரத்தில் அப்துல்கலாமிடம் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ்க்கு அப்துல்கலாம் நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
வீணையுடன் சிலைக்கு கண்டனம்
இந்நிலையில் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்க்காணல் அளித்தார். அப்போது வீணை வாசிப்பது போன்று அப்துல்கலாமுக்கு சிலை வைத்தற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
கலாமை வைத்து அரசியல்
பாஜகவின் பிடியில் கலாமின் குடும்பத்தினர் சிக்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் கலாமின் குடும்பத்தினர் சிலர் அவரை வைத்து அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்துத்துவா திணிப்பு
அப்துல்கலாமின் சிலை அருகே கீதையை வைத்தது இந்துத்துவத்தின் திணிப்பு என்று பொன்ராஜ் கூறினார். மேலும் கலாம் குர்ஆன், பைபில், பகவத் கீதை ஆகிய புனித நூல்களை படித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மோடியால் எமாற்றம்
மோடியால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருப்பதாகவும் பொன் ராஜ் கூறினார். மோடி வெறும் வாய்ச்சவடால் வீரர் என்றும் அவர் சாடினார். வரியை போட்டு மக்களின் கழுத்தை நெரிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நான் வாரிசு அல்ல
தான் கலாமின் வாரிசு இல்லை என்ற அவர், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் கலாமின் வாரிசுகள்தான் என்றும் அவர் கூறினார். கலாமின் குடும்பத்தினர் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொன்ராஜ் கூறினார்.