அப்துல் கலாம் பெயரில் தொடங்கப்பட்ட கட்சியை தடை செய்யக் கோரி அண்ணன் வழக்கு
மதுரை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள கட்சியின் பெயருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அவரது அண்ணன் ஏபிஜே முத்துமீரா மரைக்காயர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது சகோதரர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், இந்திய ஜனாதிபதியாகவும், விஞ்ஞானியாகவும் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் நாட்டுக்காக தனது பணிகளை அயராது செய்து முடித்து உள்ளார். அவர் இறந்தபின் அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் உள்ளிட்டவர்கள், அப்துல் கலாம் லட்சிய கட்சி என்ற அமைப்பை தொடங்கினர். அப்துல்கலாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் கட்சிகளை சார்ந்திருக்கவில்லை.
எனவே அவரது பெயரில் அரசியல் கட்சி தொடங்க எதிர்ப்பு தெரிவித்தோம். இது குறித்து குடியரசு தலைவரின் செயலாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம். அந்த மனுவில் அப்துல்கலாம் பெயரில் தொடங்கப்பட்டு உள்ள கட்சிக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்கள் அந்த மனுவை தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைத்தனர். அந்த மனுவை தேர்தல் கமிஷனர் முதன்மை செயலாளர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் மரைக்காயர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.