கலாம் கண்ட கனவை தேசம் நனவாக்கிக் கொண்டிருக்கிறது: மாதவன் நாயர் பெருமிதம்
ராமேஸ்வரம்: கோபத்தை வெளியில் காட்டாத அன்பான மனிதராக கலாம் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார் அவருடன் இணைந்து பணியாற்றிய, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர்.
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நாளை ராமேஸ்வரத்தில் கலாமின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதற்கிடையே கலாமுடன் நெருங்கிப் பழகியவர்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், அப்துல் கலாமுடன் பணி புரிந்து அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தவர் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர். அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் தற்போது ராமேஸ்வரம் வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
கலாமின் மனநிலை...
இஸ்ரோவில் திட்ட தலைவராக பணியாற்றிய போது அவரது மனநிலையை பார்த்து அவர் கோபத்துடன் இருக்கிறாரா, நல்ல மூடில் இருக்கிறாரா என்று தெரிந்து கொண்டு தகவல்களை தெரிவிக்க அவரது சக ஊழியர்கள் முயல்வது வழக்கம்.
கோபமாக இருந்தால் மவுனம்...
ஆனால் பெரும்பாலும் அப்துல் கலாம் எதையும் தனது முகத்தில் பளீரென்று வெளியில் காட்டிக் கொள்ளாத குணமுடையவர். அவர் மவுனமாக இருக்கிறார் என்றால் கோபமாக இருக்கிறார் என்று நாங்களாகவே புரிந்து கொள்வோம்.
ட்ரீம்...
அவர் ஒரு போதும் கோபத்தையோ, தோல்வியையோ வெளியில் காட்டிக் கொள்ளாத அன்பான மனிதராக திகழ்ந்தார். 20 அல்ல 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை துணை கோள் திட்டம் ஒன்றிற்கு பெயர் வைக்க ஆலோசித்த போது ட்ரீம் என பெயர் வைக்கலாம் என்று பரிந்துரை செய்தார்.
கலாம் கண்ட கனவு...
ஏன் என்று கேட்டதற்கு கனவை அப்போதுதான் நம்மால் நனவாக்க முடியும் என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். ஏவுகணை தொழில் நுட்பத்தில் அன்றைக்கு கலாம் கண்ட கனவை தேசம் இன்று நனவாக்கிக் கொண்டிருக்கிறது.
2 மாதங்களுக்கு முன்...
அறிவியல் உலகின் தலைவர், கலாம். அவரை 2 மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் சந்தித்து, வெகு நேரம் பேசி பொழுதை கழித்தேன்.
வேதனை...
அது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்திருப்பது பேரதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது.
அஞ்சலி...
ராமேஸ்வரத்தில் உள்ள இந்த வீட்டிற்கு வருமாறு என்னை 2 முறை கலாம் அழைத்துள்ளார். ஆனால் அப்போது என்னால் வரமுடியவில்லை. இப்போது அவர் மறைந்த பிறகு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருப்பது வேதனையளிக்கிறது' என இவ்வாறு மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.