பிஎஸ்என்எல் வழக்கில் விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் மனு- சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு!
பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை ஆஜராக விலக்கு கோரியும் கலாநிதி மாறன் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சனோதரரின் சன் குழும நிறுவனத்திற்கு பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக குருமூர்த்தி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், 2007ம் ஆண்டில் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த பிரம்மநாதன், துணை பொது மேலாளர் எம்பி வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி ஊழியர் ரவி, முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்கு ஆளாகினர்.
பிஎஸ்என்எல் வழக்கில் கடந்த ஜூலை மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று முதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கில் இருந்து வழக்கு விசாரணைக்காக தயாநிதி மாறன் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி கலாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கலாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கலாநிதி மாறன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.