மதுரை வந்தார் கள்ளழகர்.. விடிய விடிய எதிர்சேவை.. நாளை ஆற்றில் இறங்குகிறார்
மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்பு கொடுத்தனர்.
மதுரை: அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்பு கொடுத்தனர்.
இன்று காலையில் மூன்று மாவடியில் எதிர்சேவை துவங்கியது. அப்போது ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் குவிந்து கள்ளழகரை எதிர்சேவை செய்து வணங்கி வரவேற்றனர். மதுரைக்கு வந்த கள்ளழகரை இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்ததுதொடர்ந்து புதூரில் எதிர்சேவை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மதுரை அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்துடன் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி , வஸ்திரத்தை சூடி வைகையற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அது போல் இந்தாண்டும் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் நிகழ்ச்சியில் சாற்றப்படும் மாலை, கிளி, வஸ்திரம் ஆகியன ஆண்டாளுக்கு மாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின் மாட வீதி , கந்தாடை வீதி வழியாக ஆண்டாள் சூடிய மாலை சுற்றி வரப்பட்டது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சுந்தரராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து பின் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, வஸ்திரங்கள் சார்த்தப்படும். பின் அவற்றுடன் சுந்தரராஜ பெருமாள் நாளை வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.