கல்பாக்கத்தில் பயங்கரம்.. ஓய்வு பெற்ற விஞ்ஞானி கொலை… கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை
வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி விஞ்ஞானியின் கொலைக்கு காரணமானவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்: 61 வயதான ஓய்வு பெற்ற விஞ்ஞானி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாபு ராவ். 61 வயதான இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராக கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார்.
பாபு ராவ் வீட்டில் வேலை செய்வதற்காக 2 பேர் காலை 9.30 மணியளவில் வந்துள்ளனர். நீண்ட நேரம் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பின் கதவு வழியாக சென்று பார்த்துள்ளனர். அப்போது பின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. இருவரும் உள்ளே நுழைந்த போது பாபு ராவ் இறந்த நிலையில் தரையில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வேலையாட்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாபு ராவின் வலது காது மற்றும் நெற்றி ஆகிய பகுதிகளில் கட்டையால் தாக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் மற்றும் பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்பட வில்லை என்றும் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் ரூபாய் பணம் கூட அப்படியே உள்ளது என்று போலீசார் கூறினார்.
பாபு ராவின் மகள் ஜோஸ்னா மற்றும் மருமகன் மல்லய்யா ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்கு வந்துவிட்டு இரவு 8.30 மணிக்குத்தான் திரும்பிச் சென்றுள்ளனர். அதன் பிறகுதான் இந்தக் கொலை நடந்திருக்கிறது என்றுபோலீசார் தெரிவித்துள்ளனர்.
பாபு ராவின் மனைவி ராஜா லட்சுமி குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநிலத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார்.
தந்தையின் திடீர் மரணம் குறித்த தகவலை அறிந்த இவரது மகன் விஸ்வ சைதன்யா, சுவீடன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் அந்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மகாபலிபுரம் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.