அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமல் கட்சி தொடங்கி இருப்பது தமிழர்களுக்கு அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமல் கட்சி தொடங்கி இருப்பது தமிழர்களுக்கு அவமானம் என்று பொன்னார் விமர்சித்துள்ளார்.
Recommended Video
விழுப்புரம் : தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எதுவுமே தெரியாத அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமல் தனது கட்சியைத் துவங்கி இருப்பது தமிழ்நாட்டிற்கு பெரும் அவமானம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் மதுரை ஒத்தக்கடையில் நேற்று தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார். இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, கமலின் அரசியல் கட்சி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பற்றி எதுவுமே தெரியாத அரவிந்த் கெஜ்ரிவாலை வைத்து கமலஹாசன் கட்சி தொடங்கியுள்ளார். இது தமிழகத்திற்கு பெரும் அவமானம் ஆகும்.
தமிழ்ச் சிந்தனையே இல்லாத ஒருவரை வைத்து கட்சி தொடங்கினால், அந்தக் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மக்கள் விரைவில் அவருக்குப் புரிய வைப்பார்கள்.
தமிழகத்திலும் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுபோல, பாஜக ஆதரவும் பெருகிக்கொண்டே போகிறது. வரும் காலங்களில் அது தெரியவரும்.
இன்னும் இரண்டு தினங்களில் பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரி வர இருக்கிறார். ஆரோவில் விழாவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.