பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் சரியாக செயல்பட்டிருக்கிறது: கமல்ஹாசன்
சென்னை: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் தனது கடமையை சரியாக செய்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சியை தமிழிலும் முயற்சித்துள்ளனர்.
அண்மையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தொடங்கிய நாள் முதலே இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கொச்சையாக பேசுவது, உடன் இருப்பவர்களை அவமானப்படுத்துவது என தொடர்ந்து செய்து வருகிறார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் உள்ளேன்.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு மார்க் போட மாட்டேன். ஓட்டு மட்டுமே போடுவேன். அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் இருக்கத்தான் செய்கிறது. ஜி.எஸ்.டி.வரியை நாங்கள் கோரியது போல் குறைக்க வில்லை. ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் மனதார பாராட்டுகிறேன். குளிர்பானங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை சினிமாவிற்கு வழங்கப்படவில்லை என்பது வருத்தம் என்றார்.