மதுரை பொதுக்கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நெத்தியடி பதில்கள்!
Recommended Video
மதுரை: மதுரையில் இன்று தனிக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு மக்களிடம் இருந்து வந்த கேள்விகளை ஒரு நிர்வாகி படிக்க அதற்கு கமல் அசத்தல் பதில்களை தெரிவித்தார்.
கேள்வி பதில் வடிவத்திலேயே அதை பாருங்கள்.
கே: சொந்த கஷ்டங்களுக்காகத்தான் விஸ்வரூபம் எடுத்துள்ளீர்களா?
கமல்: நான் விஸ்வரூபம் எடுத்து 2வது பகுதியும் எடுக்க உள்ளேன். மக்களின் துன்பங்களை பார்த்து இனிமேல் தான் எடுக்க வேண்டும் விஸ்வரூபம். உங்களுடன் சேர்ந்து.
கே: ஊழலை ஒழிப்போம் என எல்லோரும் சொன்னார்கள். அதுவே ஊழலாகிவிட்டது. நீங்கள் ஊழலை ஒழிப்பீர்களா?
கமல்: எல்லோரும் சேர்ந்து செய்துவிட்டு, ஊழலை நான் மட்டும் ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி? நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.
கே: உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு் வருவார்களா?
கமல்: இதோ. எனது பிள்ளைகள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் (கூட்டத்தினரை பார்த்து கை நீட்டினார் கமல்). எனது மகள்கள் அரசியலுக்கு வர நினைத்தால் வரலாம்.
கே: இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?
கமல்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளத்தில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன். ஸ்டாராக இருந்தேன், இனி வீட்டு விளக்காக இருக்கப்போகிறேன்.
கே: எதற்கு ராமேஸ்வரம்? எதற்கு கலாம்?
கமல் பதில் - கலாம் வீடு இருக்கும் இடம் ராமேஸ்வரம், அதனால் அங்கு சென்றேன்
கே: தலைப்பு செய்தியாக வரலாம் தலைவராக முடியாது, போன்சாய் மரம், மரபணு மாற்ற விதை இப்படியெல்லாம் உங்களை பற்றி விமர்சனம் செய்கிறார்களே, உங்கள் பதில்?
ப: இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா வேலையை பார்க்கனுமா? அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும், நாம் வேலை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நல்லா வளரும் செடியை வெட்டிக் கொண்டிருந்தால் எல்லாமே போன்சாய் மரங்கள்தான். நல்ல விதையையும் கமிஷன் பெற்றுக்கொண்டால் மரபணு மாற்ற விதையாக மாற்றிவிடுவார்கள். இவ்வாறு கமல் தெரிவித்தார். கமல் மரபணு மாற்ற விதை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.