கனிமொழி கிராமத்தை மாடலாக வைத்து 10 கிராமங்களை தத்தெடுக்கும் கமல்!
கனிமொழியின் தத்தெடுப்பு கிராமத்தை முன்மாதிரியாக வைத்து 10 கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறாராம் கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தத்தெடுத்துள்ள கிராமத்தை முன்மாதிரியாக வைத்து தங்களது கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறாராம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியைத் துவக்கி தனது அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கமல். தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக மக்களிடம் நெருங்குவதற்கான செயல்திட்டங்களைத் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்கள் கமலின் கொள்கை வகுப்பாளர்கள்.
அதில் ஒன்று கிராமங்களைத் தத்தெடுத்தல். இந்த யோசனையை கமலிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதையும் கவர் பண்ணுகிற மாதிரி 4 திசைகளையும் உள்ளடக்கி 10 கிராமங்களை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார் கமல்.
எம்பிக்கள் தத்தெடுக்கும் கிராமங்கள்
தமிழக கிராமங்களிலிருந்து தேசத்தைப் பார்ப்பேன் என சொல்லி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒவ்வொரு கிராமங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்தனர்.
கனிமொழியின் முன்மாதிரி கிராமம்
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேஷபுரத்தை தத்தெடுத்திருந்தார் கனிமொழி. தத்தெடுத்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்க பல்வேறு பணிகளை செய்து முடித்து வருகிறார் அவர்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
இந்த சூழலில், எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எது எது என கணக்கெடுத்துள்ள கமல், கனிமொழி தத்தெடுத்துள்ள கிராமத்தில், மக்களுக்கான சுகாதாரம், கல்வி, குடிநீர், விவசாயம், சாலைகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் என்னென்ன விசயங்களை செய்திருக்கிறார் என்கிற விபரங்களையும், அதற்கான செலவினங்களையும் சேகரிக்கத் துவங்கியிருக்கிறார். அத்துடன், இத்தகைய பணிகள் குறித்து மக்களின் கருத்துக்ககளைத் திரட்டவும் திட்டமிட்டுள்ளாராம் கமல்.
கனிமொழி ஆதரவாளர்கள் தீவிரம்
தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஒரு எம்.பி.செய்து தருகிறபோது அதனை கிராம மக்கள் நினைத்துப் பார்கிறார்களா? என்பதை அறிந்துகொள்ளவே மக்களின் கருத்தறிவதன் நோக்கம் என்கிறார்கள் கமலின் மய்யத்தினர். கமலின் இந்த ஆய்வை கனிமொழி ஆதரவாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனராம்.