முழு நேர அரசியலில் ஈடுபடாதீர்கள்... இது ஒன்றும் நமக்கு தொழில் இல்லை.. கமல் திடீர் அட்வைஸ்!
Recommended Video
காங்கேயம்: முழு நேர அரசியலில் ஈடுபடாதீர்கள். இது ஒன்றும் நமக்கு தொழில் இல்லை என்று கமல்ஹாசன் தனது தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதி போன்றவை உங்களுக்கு இருக்கிறதா?
அவை இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும். உங்கள் கிராம சபைகள், அவைகளில் உங்கள் பங்கீடு பலமாக இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் பங்கீடு மட்டும் மல்ல, மக்களின் பங்கீடும் தேவை. திருவிழா போல கிராம சபைகளை நடத்த வேண்டும்.
அரசியல் தொழிலாக இருக்கக் கூடாது
அங்கே எழுப்பப்படும் கேள்வி எந்த நீதிமன்றத்தையும் அதிரவைக்கும். நீங்க அரசியலில் முழுநேரமாக ஈடுபட வேண்டியதுதானே, ஏன் நடுவுல டிவி நிகழ்ச்சி பண்றீங்க எனக் கேட்கிறார்கள். அவரவருக்கு தொழில் வேண்டும், அரசியல் தொழிலாக இருக்கக்கூடாது.
முழு நேர அரசியல்
அரசியல் தொழிலாக ஆனதால் தான் பல பேர் அதையே வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அரசியல் தொழில் அல்ல, நாட்டுக்கு நாம் செய்யப் போகும் கடமை. நான் இந்த மேடையில் இருப்பவர்களிடமும் சொல்லிக் கொள்கிறேன், முழுநேரமும் அரசியல் செய்ய வருகிறேன் என்கிறீர்கள்.
மிரட்டாதீர்
அது மக்கள் நீதி மய்யத்தில் நடக்காது. முழு நேரமும் தூங்குபவன் சோம்பேறி. முழுநேர அரசியல் செய்யுங்கள் என மற்றவர்களும் மக்கள் நீதி மய்யத்தை மிரட்டாதீர்கள்.
நேரமில்லை
உங்களுக்கு முடிந்த நேரத்தை அரசியலுக்கு ஒதுக்குங்கள். நம் எல்லோருக்கும் கடமை இருக்கிறது. இப்போது வாக்குறுதி கொடுப்பதற்கெல்லாம் நேரமில்லை. வேலை செய்வதற்கான நேரம் வந்து விட்டது. இவ்வாறு கமல் பேசினார்.
அனுமதிக்கப்படவில்லை
திருப்பூர் அருகே கமல்ஹாசன் பங்கேற்ற பொதுக் கூட்டம் நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் நடந்தது. அந்த பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தடியடி
கூட்டம் முடிந்து கமல் புறப்பட்டதும், அவரது காருக்குப் பின்னால் தொண்டர்கள் வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.