சில ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கோடிக்கணக்கான பணத்தை விற்றுவிடாதீர்- கமல்ஹாசன் அட்வைஸ்
Recommended Video
அரூர்/ ஊத்தங்கரை: ஒரு நாள் பணத்தை பெற்று வாக்களித்து விட்டு 5 ஆண்டுகளுக்கு உங்களை அடகு வைத்து கொள்ளாதீர் என கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன். அப்போது வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசும் பேச்சு மிகவும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, பர்கூர், ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் பொதுகூட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இடைத்தேர்தலில் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும்.
[கல்வியும் இலவசமாக கொடுக்கிறோம்.. அதற்காக படிக்காமல் இருந்துவிட முடியுமா?- முதல்வர் எடப்பாடி கேள்வி]
விற்காதீர்
ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்களுக்கு உங்கள் வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள். சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்றுவிடாதீர்கள் என்றார்.
நலன் மட்டுமே
ஊத்தங்கரையில் கமல் பேசுகையில் கிராம சபை, மய்யம் விசில் என்று பல ஜனநாயக ஆயுதங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுக்கு கொடுத்து வருகிறது. நான் மக்களைச் சுற்றியே வருகிறேன், அதற்கு காரணம் மக்களின் நலன் மட்டுமே.
பொறுப்பும், கடமையும்
மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை என் மீது நீங்கள் காட்டும் அன்பினால் எனக்கு அதிகரிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெண்கள் விவசாயிகள், தொழிலாளிகள் என அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது.
தேர்வு செய்யும் கடமை
நடக்கும் ஆட்சி மீது கோபம் உள்ளது. அக்கோபத்தை சரியாக மடைமாற்றினால் நாளை நமதே! தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்றார்.
தேர்தல் சந்திக்க தயார்
அது போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கமல் பேசுகையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை, மொத்தமாக செய்ய வேண்டியது தான். வேலைவாய்ப்பிற்காக தனது சொந்த மக்களை அடுத்த மாநிலத்திற்கு இந்த அரசு அனுப்பி வைத்து வேடிக்கை பார்க்கிறது! நேர்மையான முறையில் அரூர் வருகின்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.
தமிழகம் முழுவதும்
உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் எனது மீசையை முறுக்குகிறேன். இந்த மீசையின் முறுக்கு நமது நேர்மையின் முறுக்கு. செல்லும் வழியெல்லாம் இந்த கூட்டம். 8 மாதத்திற்கு முன் எங்கள் கட்சியின் பெயரை சொல்வதற்கு 8 வருடங்கள் ஆகும் என்று சொன்னார்கள். இன்று தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் எனும் பெயர் ஒலிக்கிறது என்றார்.
பெரிய நம்பிக்கை
ராயக்கோட்டையில் கமல் பேசுகையில் தமிழகத்தை முன்னேற்றும் பொறுப்பு. இளைஞர்களின் கைகளில் தாய்மார்களின் கைகளில் இருக்கிறது. மக்கள் பெருங்கூட்டமாக வரவேற்பது என்னையல்ல தமிழகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னை வரவேற்கிறார்கள். மக்களாகிய நீங்களும் தயாராகுங்கள் நாங்களும் தயாராக இருக்கின்றோம். எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை பெரிதாக இருக்கிறது என்றார்.
தெளிவாக இருங்கள்
பர்கூரில் கமல் பேசுகையில்
மக்கள் கேட்கும் அனைத்து கோரிக்கைகளையும் அரசு செய்ய முடியும் ஆனால் அரசு எதையும் செய்ய முன் வரவில்லை. அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தவில்லை. போச்சம்பள்ளி ஜவுளித் துறையில் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை. இப்பொழுது அரிய வாய்ப்பு உங்களுக்கு வந்திருக்கிறது. கையில் இருக்கும் ஜனநாயக ஆயுதத்தை சரியாக பயன்படுத்தவேண்டும். முதல் முறை ஓட்டுபோடுபவர்கள் சரியாக ஓட்டு போட வேண்டும். ஏற்கனவே ஓட்டு போட்டவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
எனவே இம்முறை மிகத்தெளிவாக முடிவெடுத்து வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார் கமல்ஹாசன்.