கொற்கை டூ மதுரை.. தமிழகத்தின் தலைநகரை மாற்ற சொல்கிறாரா கமல்ஹாசன்?
பாண்டியர்களைப் போல தமிழகத்தின் தலைநகரை சென்னையில் இருந்து மாற்ற சொல்கிறாரா நடிகர் கமல்ஹாசன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சுனாமியால் பாண்டியர் தலைநகர் கொற்கையில் இருந்து மாறியது; வரலாற்றை பார்க்காமல் செய்த தவறை திரும்ப செய்யக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் பேசியிருப்பதன் மூலம் தமிழகத்தின் தலைநகரை சென்னையில் இருந்து மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை கமல்ஹாசன் முன்வைக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் ஆண்டுதோறும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை தலைநகராக இருப்பதால் பிற மாவட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறி இங்கேயே செட்டிலாகின்றனர்.
இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் அதிபர்கள் நீர் நிலைகளை அரசு இயந்திரங்களின் துணையுடன் அபகரித்து குடியிருப்புகளாக மாற்றிவிட்டனர். இதனால்தான் சென்னை பெருநகரம் எப்போதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
கமலின் பேச்சு
இந்த நிலையில் சென்னையில் இன்று தமது ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது பாண்டியர்கள் தலைநகராக இருந்த கொற்கை சுனாமியால்தான் அழிந்தது; அதனால் பாண்டியர்களின் தலைநகரமானது மதுரை. இந்த வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்; அழிவுகள் வரும் வரை காத்திருக்க தேவை இல்லை என கமல்ஹாசன் பேசினார்.
தலைநகரை மாற்ற வேண்டும்?
கமல்ஹாசன் தம்முடைய பேச்சின் மூலம், சென்னை மாநகரம் சுனாமி, 2015 பெருவெள்ளம், வர்தா புயல் என அடுத்தடுத்து பாதிக்கிறது; ஆகையால் பாண்டியர்களைப் போல தலைநகர் சென்னையை இப்போது மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறாரோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகராக திருச்சி
தமிழகத்தின் தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இதற்கான முயற்சிகளும் கூட எடுக்கப்பட்டன.
கமலும் வலியுறுத்துகிறார்?
தற்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே கோரிக்கையைத்தான் நடிகர் கமல்ஹாசனும் வலியுறுத்துகிறாரா? என்பதை வழக்கம் போல அவர்தான் விவரிக்க வேண்டும்.