திரைப்படத்தை மிஞ்சும் திருப்பம்.. கவுதமி பற்றிய அறிக்கையை கமல் வெளியிடவில்லையாம்!
கவுதமியுடனான பிரிவு குறித்து தான் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல் மற்றும் நடிகை கவுதமி இருவரும் திருமணம் செய்யாமலேயே 13 வருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலுடனான லிவ்விங் டு கெதர் வாழ்வை, முறித்துக்கொள்வதாக கவுதமி நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து நேற்றிரவு முதல் கமல் வெளியிட்ட அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்தது. அதில் எழுத்துப்பிழைகளும் இருந்தன. ஆனாலும் கமல்தான் அறிக்கையை வெளியிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்க, அவரை போலவே எளிதில் புரியாத வார்த்தைகளை போட்டு அறிக்கையை விஷமிகள் நிரப்பியிருந்தனர்.
இந்நிலையில், "இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை." என தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இன்று மதியம் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2016
இதன்மூலம், அறிக்கை பற்றிய வதந்திகளுக்கு கமல் முற்றுப் புள்ளி வைத்துள்ளார். கமல் வெளியிட்டதாக கூறப்பட்ட அறிக்கையில், பிரிந்து போனவர்கள் மலம் என்று ஒப்பிட்டு கூறப்பட்டிருந்தது. கவுதமிக்கும், கமலுக்குமான உறவை மேலும் விரிசல்படுத்தும் முயற்சியாக அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.