டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது என் ஆசை- கமல்ஹாசன்
சென்னை: டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து டெல்லியின் முதல்வராக 3 ஆவது முறையாக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு முக்கிய காரணம் இவர் டெல்லியில் அவர் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் ஆகும். பாஜகவை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடவுள்ள ஆம் ஆத்மியையும் கெஜ்ரிவாலையும் அரசியல் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.
கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அது போல் திமுக தலைவர் முக ஸ்டாலினும் வாழ்த்தினார். மக்கள் நீதி மய்ய்ம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கெஜ்ரிவாலும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லியில் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி தோற்கடித்துள்ளது.
இந்த மாற்றம் இந்தியாவில் ஏற்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் கூறுகையில் கண்டிப்பாக தமிழகத்திலும் அந்த மாற்றம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் கமல்ஹாசன். சென்னைக்கு கெஜ்ரிவால் வந்திருந்தபோது கமல்ஹாசன் வீட்டுக்குப் போயிருந்தார்.