ஏன் இந்த அச்சம்? 'முடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும்', ரஜினிகாந்த், கமல்ஹாசன்!
Recommended Video
சென்னை: "முடிந்த கல்யாணத்திற்கு மோளம்" அடிப்பது என்று சொல்வார்களே அதை ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
கர்நாடகாவில் 104 தொகுதிகளை வென்ற பாஜக, இன்னும் குறைந்தது 9 எம்எல்ஏக்களையாவது பிற கட்சிகளில் இருந்து இழுத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டி அலைந்தது.
இதற்கு வசதியாக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினார். அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 15 நாட்கள் என்பது மிக அதிகம் என கூறியதோடு, 17ம் தேதி எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற நிலையில், 19ம் தேதியே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த எடியூரப்பா, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
குமாரசாமி முதல்வராகிறார்
மஜத 38 தொகுதிகளில் வென்ற நிலையில், 78 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் மஜதவின் தலைவர் குமாரசாமி முதல்வராக ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் வரும் புதன்கிழமை, பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் விழாவில் குமாரசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
ரிசார்ட் அரசியல்
பாஜக வலைவீச்சையடுத்து, பெங்களூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், பின்னர் நள்ளிரவில் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டனர். பெங்களூர் வர விமானம் கிடைக்காத நிலையில், பஸ்சிலேயே பெங்களூர் வந்தனர். குதிரை பேர அச்சத்தால் இப்படியெல்லாம், அலைக்கழிக்கப்பட்டனர் அவர்கள்.
போனில் குதிரை பேரம்
மேலும், எடியூரப்பா, ஸ்ரீராமலு போன்ற பாஜக முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் வருமாறு கூறி போனில் அழைப்புவிடுத்த டேப்களை காங்கிரஸ் வெளியிட்டபடியே இருந்தது. பல கோடி பேரம் பேசப்பட்டது அந்த ஆடியோ மூலம் தெரியவந்தது. ஆனால், இவ்வளவு அமளி, துமளி நடக்கும்போது ஒரு கருத்தையும் தெரிவிக்காத நடிகர்களும், அரசியல்வாதிகளுமான கமல்ஹாசனும், ரஜினிகாந்தும், எல்லாம் முடிந்த பிறகு, தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் பேட்டி
கமல்ஹாசன் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளதாக டுவிட் செய்திருந்த நிலையில், 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்த ஆளுநர் செயல் சரியில்லை என்று ரஜினிகாந்த் நேற்று பேட்டியில் கூறியுள்ளார். ஆளுநர் செயல் சரியில்லை என்பதை உச்சநீதிமன்றமே கூறி, கால அவகாசத்தை குறைத்து, ஆட்சியும் கலைந்த பிறகு உச்சநடிகர் கருத்து கூறுவதுதான் உச்சகட்ட காமெடி. ஆளுநர் செயல் தப்பு என நினைத்திருந்தால், பிரச்சினை பெரிதாக இருந்தபோது அதை கூறியிருக்கலாமே ஏன் இந்த தாமதம்?
கமல் செலக்டிவ் கருத்து
மற்றொரு பக்கம் தமிழக அரசை சாட்டை கொண்டும், மத்திய அரசை மயிலிறகு கொண்டும் விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசனும், இந்த விஷயத்தில் மக்களால் கவனிக்கப்பட்டுவருகிறார். ஜனநாயகம் குறித்த அவரது டுவிட்டை நெட்டிசன்கள் கோபத்தோடு பார்ப்பதை கவனிக்க முடிந்தது. கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டிருந்தபோது, தினமும் பல கருத்துக்களை டுவிட்டரில் கூறியவர் கமல். மக்கள் தங்கள் எம்எல்ஏக்களுக்கு போன் செய்ய வேண்டும் என கூறி கூவத்தூர் கூடாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தினார் கமல். மக்களும் அதைப்போல செய்தனர். இதற்கு பலனாகத்தான் மாஃபா பாண்டியராஜன் போன்றோர் கூவத்தூரிலிருந்து தொகுதி பக்கம் ஓடி வந்தனர். ஆனால், கர்நாடகாவில் இவ்வளவு வெளிப்படையாக குதிரை பேரமும், அதிகார போட்டியும் நடப்பதை பார்த்தும் கமல் முதலில் எந்த கருத்தையும் கூறவில்லை. இதனால்தான் ரஜினி, கமல் இருவருமே முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் அடிக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.