இவர்களும் இப்படித்தான் போலும்.. கமல் நிகழ்ச்சியால் ஆழ்வார்பேட்டையில் டிராபிக் நெரிசல்.. மக்கள் அவதி
Recommended Video
சென்னை: கமல்ஹாசன் கட்சி நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் கட்சி கொடியேற்றினார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன்.
எனவே, அங்கு, ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்ததால் ஆழ்வார்பேட்டை சிக்னல் பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து வருவதால் வாகனங்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
ஆழ்வார்பேட்டை பகுதியில் வாகனங்களில் செல்வோர் இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நகரின் மையப்பகுதியில் இதுபோல தொண்டர்கள் நடந்து கொண்டது பொதுமக்களை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
திமுக, அதிமுக கட்சியினர், தங்கள் தலைவர்கள் நிகழ்ச்சியின்போது இப்படி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்தது. தற்போதுதான் அது சற்று மாறியுள்ளது. சமீபத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வந்தபோது, ஏகப்பட்ட பேனர்கள் நகரம் முழுக்க வைக்கப்பட்டிருந்தது. நடை பாதைகளும் தப்பவில்லை.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், சென்னை பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்திராக பங்கேற்றார். அப்போது மதுரவாயல் முதல், வேலப்பன்சாவடி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் மாற்றத்திற்கான கட்சியாக அடைாயளப்படுத்திக்கொள்ளும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.