இனி நான் பயப்பட மாட்டேன்.. கல்லூரி விழாவில் கொந்தளித்த கமல்ஹாசன்
வேலூர்: இனி கட்சி நடத்துவதற்கான செலவுக்காகத்தான் சினிமாவில் நடிப்பேன் என்றும், அச்சப்படப்போவதில்லை என்றும், கமல்ஹாசன் தெரிவித்தார்.
வேலூரிலுள்ள புகழ்பெற்ற, சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில், மருத்துவ மாணவர்கள் கலை விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:
இந்த மருத்துவக் கல்லூரியை உருவாக்கியவர் ஐடாஸ்கடர். அவர் பெயரும் முகமும் மறந்து போகலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற இந்த கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.
பயப்பட மாட்டேன்
நல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும். நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் அரசு அல்ல, அன்பு அரசு. இந்த அரசு 100 ஆண்டுகள் கூட இருக்கும். நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன். தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை பற்றி நாம் சிந்தித்துகொண்டிருப்போம். நமக்கு எதுக்கு இதெல்லாம், நமது சட்டை கசங்கிவிடும் என்று நினைத்து பயந்தேன். ஆனால் இனி பயப்பட மாட்டேன்.
|
மக்களுக்காக
நாங்கள் மற்றவர்களுக்காக சிரிப்பவர்கள், அதேபோலதான், அழுபவர்கள். எனவே நான் இப்போது பேசுவதை நீங்கள் நம்பி ஆகவேண்டும். மீதம் இருக்கும் என் நாட்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான் செலவு செய்யப்போகிறேன். இனி நான் சினிமாவில் வேலை பார்த்தால், அதுகூட என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான்.
நீங்களும் வர வேண்டும்
அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இதை உங்களிடம் சொல்லக் காரணம் என்ன என்று யோசிக்கலாம். இவரே செய்யும்போது நான் செய்யக்கூடாதா என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன். ஒரு சினிமா நடிகனாக சம்பாதித்து செட்டில் ஆகி நிம்மதியாக சென்று இருக்கலாம். 63 வயதில் நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? அவர் 63 வயதிலும் கூட மக்களுக்காக களமிறங்கியுள்ளாரே, நாம் ஏன், 23 அல்லது 24 வயதில் இதை செய்ய கூடாது என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.
கல்லூரியில் அரசியல்
கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கட்சி அரசியல் தான் கூடாது. மக்களுக்கான அரசியல் பேசலாம். ஏனெனில் உங்களை ஆட்டுவிப்பதே அரசியல் தான். அதை பேச நாம் ஏன் தயங்க வேண்டும்? உங்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து ஒதுங்கக்கூடாது.
மாணவர் அரசியல்
மாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும் என்று நான் சொல்வேன். வருங்காலம் உங்களை ஆட்டி வைக்க போகிறதா அல்லது நல்லதாக அமைய போகிறதா? என்பதை அரசியல் தான் முடிவு செய்கிறது. பின்னர் மாணவர்கள் பேச கூடாது என்பது நியாயமில்லை. அரசியலை கண்டு ஒதுங்காமல் புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் மாணவர்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருந்தால்தான் தான் நாட்டை திருத்த முடியும். காசு வாங்கி கொண்டு ஓட்டுபோடும் கொடுமையை மூழ்கடிக்க மாணவர்களால்தான் முடியும். இப்போது ஒதுங்கிவிட்டால் வயதான பிறகு என்னை போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால், இந்த கொடுமை என்னோடு போகட்டும். அடுத்த தலைமுறைக்கு அந்த வருத்தம் இருக்க கூடாது.