நான் சொன்ன மாதிரியே திமுக-காங்கிரஸ் இடையே பிரிவினை ஏற்பட்டுள்ளது.. கமல் ஹாசன்
சென்னை: திமுக-காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என சொல்லியிருந்தேன். இப்போது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக காங்கிரஸ் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளாட்சி தேர்தலில் திமுக தங்களுக்கு போதிய இடம் ஒதுக்காமல் புறக்கணித்தது என்றும் கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் அதிருப்தி அடைந்த திமுக தலைமை, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக சார்பில் யாரையும் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
பாதிப்பில்லை
இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. அவர்களை போகாதே, போகாதே என்று ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியம் இல்லை என திமுகவின் பொருளாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்தார்.
காலம் பதில்
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டிஆர் பாலுவும் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளிப்படையாக விமர்சனம் செய்தது தவறு என்றும் ஸ்டாலினிடம் நேரடியாக கூறியிருக்க வேண்டும் என்றும் என்றும் கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்றும் டிஆர் பாலு கூறினார்.
கனிமொழிக்கு எம்பி
துரைமுருகன் பேச்சுக்கு பதிலடியாக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பதற்கு காங்கிரஸ் உதவி தேவைப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினார். விருதுநகர் எம்பி மாணிக் தாகூர், ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க திமுகவிலேயே சிலர் வேலை பார்ப்பதாக வெளிப்படையாக விமர்சித்தார். கனிமொழிக்கு கூட்டணியில் இல்லாத போதும் எம்பி பதவி தரப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்.
சொன்ன மாதிரியே பிரிவு
இப்படி காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், திமுக-காங்கிரஸ் கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் செல்லியிருந்தேன், அது நடந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றார்.