தசாவதாரம் போட்ட நாயகனுக்கு பிடித்த அவதாரம் இதுதானாம்- மனம் திறந்த கமல்
கோவை: எனக்கு பிடித்தது அரசியல்வாதி அவதாரம்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு முன்பும் சரி , பின்பும் சரி கமல்ஹாசன் அரசை எதிர்த்து பேசாமல் இருந்தது இல்லை.
தவறு என்று தெரிந்தால் தைரியமாக எதிர்க்கும் துணிச்சலுடன் உள்ளார் கமல்ஹாசன். அவர் இளைஞர்கள் அரசியல் வர வேண்டும் என எண்ணுகிறார். அதற்காக கல்லூரி மாணவர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
அவதாரத்தில்
அதன்படி கோவை கிருஷ்ணா கல்லூரியில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள், தன்னார்வலர்களிடையே பேசிய கமல்ஹாசன், எனக்கு பிடித்தது அரசியல்வாதி அவதாரம்தான். நான் நானாக உங்களோடு கலப்பது, இந்த அவதாரத்தில்தான் முடிந்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு
உங்கள் வயதில் அரசியலுக்கு நான் வந்திருக்க வேண்டும். வராததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதனால் நீங்களாவது இந்த வயதில் அரசியலுக்கு வாருங்கள். பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
சரியா கட்டம்
அரசியலை பாடமாக எடுத்தவர்கள் என்ன பேசுவார்கள். நாளை உங்களது வாழ்வை வெகுவாக பாதிக்கக்கூடியது அரசியல். எது நல்ல அரசியல் என்பதை நீங்கள் உணர வேண்டும். வாழ்க்கையின் சரியான கட்டத்தில் இருக்கிறீர்கள்.
வேலைக்காரர்கள் உலகம்
இந்தியாவை செதுக்கும் திறமை மாணவர்களாகிய உங்களிடம் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால் அரசியல் களத்திற்கு வாருங்கள். இது வேலைக்காரர்களின் உலகமாக அல்லாமல், முதலாளிகளின் உலகமாகப் போகிறது.
அரசியலை மாற்ற முடியும்
அரசு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. தனியார் வேலைவாய்ப்புகளும், குறுந்தொழில்களும் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களால்தான் அரசியலை மாற்ற முடியும் என்றார் கமல்ஹாசன்.