ஆளுநர் பதவி விலக வேண்டும்.. அதுதான் அரசியல்வாதிக்கு அழகு.. கமல்ஹாசன்
சென்னை: MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஆளுநர் தன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் பதவி விலக வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும். மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தமிழக அரசு தள்ளிப் போடுவது நாடகம் ஆடுவதை காண்பிக்கிறது. இதற்காக தேர்தலை தள்ளி போட வேண்டுமா.
தட்டிக் கழித்தனர்
சிலை கடத்தல் விவகாரத்தில் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் என்பது நம்முடைய சொத்து தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் உதவ முன் வந்தபோதும், எங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என தட்டிக்கழித்து விட்டனர்.
கருத்து சொல்ல வேண்டும்
நிதின் கட்கரியின் கருத்துக்கு, உண்மையை பேசக்கூடிய சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் கருத்து சொல்ல வேண்டும்.
பதவியில் இருக்கக் கூடாது
ஆளுநர் விவகாரத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் பதவி விலக வேண்டியது தான் தைரியமான அரசியல்வாதிக்கு அழகு. அதை நிரூபிக்கும் வரை அவர் தன் பதவியில் இருக்கக் கூடாது.
வெறும் பேச்சு
ஆளுநர் என்பவர் மிகவும் ஜாக்கிரதையாகவும் மரியாதையாகவும் பேச வேண்டும். அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற ஓ.பி.எஸ் பேச்சுக்கு, அது வெறும் பேச்சு மட்டும் தான் என்றார் கமல்ஹாசன்