ஸ்ட்ரைட்டா லோக்சபாவா?.. இந்த கவுன்சிலர், நகராட்சித் தலைவர், எம்எல்ஏ.. இதெல்லாம் வேண்டாமா ஆண்டவரே!!
சென்னை: லோக்சபா தேர்தலில் மட்டும் போட்டியிடுவேன் என்று கமல் கூறியிருக்கும் நிலையில் அப்ப இடைத்தேர்தல்களையெல்லாம் அவர் மட்டமாக கருதுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை புதிய கோணத்தில் கட்சிகள் சந்திக்கவுள்ளன. பல புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. பல புதிய கட்சிகள் மக்களை சந்திக்கவுள்ளன.
அப்படிப்பட்ட கட்சிகளில் ஒன்றுதான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். லோக்சபா தேர்தலை சந்திக்க தனது கட்சி தயார் என்று கமல் கூறியுள்ளார். அதேசமயம், இடைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கருணாநிதி இல்லை
தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் தமிழக மக்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்று ஆழம்பார்க்கும் வியூகங்களில் இறங்கியுள்ளன.
வியூகம்
பல கட்சிகள் கூட்டணி பேரம் பேசும் அளவுக்கு தேர்தல் தொடர்பான முஸ்தீபுகள் இப்போதே லேசாக சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக வார்டு எலெக்ஷன் முதல் லோக்சபா எலக்ஷென் வரை போட்டியிட்டு வெற்றி தோல்விகளை பெற்று வந்தாலும் தற்போதுதான் முதன் முதலாக போட்டியிடுவதுபோல் வியூகம் வகுத்து வருகின்றன.
தங்களது கடமை
நிலைமை இப்படியிருக்க கமல்ஹாசனோ லோக்சபா தேர்தலில் மட்டும் போட்டியிடுவது என்றும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஏன் இந்த முடிவு என்று தெரியவில்லை.
தேர்தல்
இடைத் தேர்தலிலும் மக்கள்தான் வாக்களிக்கவுள்ளனர். அதுவும் ஒரு தேர்தல்தான். பெரிய தேர்தலை சந்திப்பதற்கு முன்பு இதுபோன்ற இடைத் தேர்தல்கள்தான் ஒருவர் தனது பலத்தை பரீட்சித்துப் பார்க்க உதவியாக இருக்கும். இது கமலுக்குப் புரியாமல் போனது ஏன்?
விஜயகாந்த் முன்னுதாரணம்
இதில் கமலுக்கு விஜயகாந்த் நல்ல முன்னுதாரணம். கட்சி தொடங்குவதற்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தினரை வைத்து வார்டு கவுன்சிலர் தேர்தல்களில் ஆழம் பார்த்தவர் விஜயகாந்த். அதில் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்துதான் அவர் தைரியமாக கட்சி ஆரம்பித்து கலக்கினார். வார்டு கவுன்சிலர் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டார்.
மக்களிடம் வாக்கு
வெற்றி பெற்றாரா, தோல்வி அடைந்தாரா என்பது வேறு விஷயம். ஆனால் அவர் அப்படி போட்டியிட்டதால்தான் மக்களின் மனதில் உள்ளதை நாடி பிடித்து பார்க்க முடிந்தது. மக்களை வேகமாக ரீச் ஆக முடிந்தது. ஒயிட் காலர் அரசியல் செய்யாமல், தெருத் தெருவாக வீதி வீதியாக சென்று மக்களிடம் வோட்டு கேட்டார் விஜயகாந்த்.
நன்றாக இருக்கும்
கமல்ஹாசன் இந்த விஷயத்தில் அவரையே முன்னுதாரணமாக எடுக்கலாம். அதாவது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின்னர் 2வது ஹீரோ, மெயின் ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என படிப்படியாகத்தான் அவர் உயர்ந்தார். ஆனால் தேர்தல் அரசியலில் மட்டும் ஏன் இடைத் தேர்தலை அவர் விரும்பவில்லை என்று தெரியவில்லை. கமல் இடைத்தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. போட்டியிட்டால் நல்லாருக்கும் என்றுதான் சொல்ல விரும்புகிறோம்.
அவமதிக்கும் செயல்
ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது வாக்களிப்பது ஜனநாயக உரிமை, எனவே அனைவரும் வாக்களியுங்கள் என்று கமல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் விளம்பரம் செய்வதை போல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவது ஜனநாயக கடமைதான் ஆண்டவரே. இன்று கிடைக்கும் கலாக்காயை விட்டு விட்டு நாளை கிடைக்கும் பலாக்காய்க்கு ஆசைப்படுவது இடைத்தேர்தல் வாக்காளர்களை அவமதிக்கும் செயலாகும்.
வாக்காளர்களும் நாங்கள் இந்த தேர்தலில் வாக்களிப்போம், அந்த தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்றால் என்ன ஆகும் ஆண்டவரே....!