தமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம்
சென்னை: தமிழக பட்ஜெட்டுக்கு கண்ணீரில் நனைந்த கண்டனத்தை தெரிவிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி நிலை அறிக்கை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
பல பிரிவுகளையும் தனித்தனியாக குறிப்பிட்டு விமர்சனம் முன்வைத்துள்ள கமல்ஹாசன், பட்ஜெட் குறித்து ஆய்வு செய்துவிட்டு கருத்து கூறியதால்தான் தாமதம் என தெரிவித்துள்ளார்.
2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து pic.twitter.com/RgdlKNfD0D
— Kamal Haasan (@ikamalhaasan) March 16, 2018
திருக்குறளை தவிர கடந்த பட்ஜெட்டின் நகல்தான் இந்த பட்ஜெட் என கிண்டலுடன் விமர்சனத்தை ஆரம்பித்துள்ளார் கமல். தமிழகத்தில் வேலைதேடுபவர்கள் ஒருகோடிக்கும் மேல் என்ற நிலையில், பட்ஜெட்டில் கடந்த 7 வருடங்களில் 4 லட்சம் இளைஞர்களே திறன் பெற்றுள்ளதாகவும், அதிலும் 1 லட்சம் இளைஞர்களே பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே என வினா எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்குவதாக கூறியுள்ளபோதிலும், கடந்த வருடமும் அறிவித்ததை போல இதுவும் கானல் நீர்தானோ என வினா எழுப்பியுள்ளார்.
இறுதியாக, ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் ரூ.45,000 என்றும் எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம் என கமல் கூறியுள்ளாார்.