காஷ்மீரில் வீர மரணமடைந்த கயத்தாறு சுப்பிரமணி.. வீட்டுக்கு சென்று நேரில் ஆறுதல் கூறிய கமல்
தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணி குடும்பத்தினருக்கு கமல் நேரில் ஆறுதல் சொன்னார்.
கயத்தாறு: காஷ்மீரில் குண்டுவெடிப்பில் பலியான கயத்தாறைச் சார்ந்த சிஆர்பிஎஃப் ராணுவ வீரர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 45 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில், கோவில்பட்டி அருகேவுள்ள சீவலப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற இரு தமிழர்களும் அடக்கம். இவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும், உடனடியாக இக்கொடூர சம்பவத்துக்குகண்டனத்தை பதிவு செய்தார். அத்துடன், தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன், தங்களின் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோளோடு தோள் கொடுத்து நிற்போம் என்றும் சொல்லி இருந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த இராணுவ வீரர் சுப்பிரமணியின் வீட்டுக்கு மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியனின் உருவபடத்திற்கு மலர்தூவி கைகூப்பி மரியாதையும் செலுத்தினார்.
அப்போது அழுது கொண்டிருந்த சுப்பிரமணியனின் அப்பா மற்றும் குடும்பத்தினரை தேற்றிய கமல் அவர்களுக்கு தன் ஆறுதலையும் தெரிவித்து கொண்டார். சிறிது நேரம் சுப்பிரமணியம் அப்பாவிடம் கமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.