அரிதாரம் பூசியது முதல் அரசியல் வரை... உலக நாயகன் கடந்து வந்த பாதை
கமல்ஹாசன் நடிகர் முதல் அரசியல்வாதி கடந்து வந்த பாதை குறித்த பயணம்.
Recommended Video
சென்னை: கமல்ஹாசன் நடிகராக அறிமுகமாகி தற்போது 63 வயதில் அரசியல்வாதியாக உருவெடுத்தது வரை அவர் பயணத்தில் சில முக்கியமான நிகழ்வுகளை பற்றிய தொகுப்பு.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 1954-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். அய்யங்கார குடும்பத்தில் பிறந்த அவரது தந்தை சீனிவாசன் ஒரு வழக்கறிஞராக இருந்தார். தாய் ராஜலட்சுமி. தனது தொடக்கக் கல்வியை பரமக்குடியில் முடித்த கமல், தனது குடும்பத்துடன் சென்னை நோக்கி சென்றார்.
அவரது தாய் ராஜலட்சுமி, ஏவிஎம் செட்டியாரின் மனைவி பார்ப்பதற்காக கமல்ஹாசனுடன் சென்றார். அப்போது அவரது நடத்தையால் வியந்த எம்.சரவணன் அவர்களது தயாரிப்பான களத்தூர் கண்ணம்மாவில் நடிப்பதற்காக கமலை பரிந்துரைத்தார். அன்று தொடங்கியதுதான் கமலின் திரைப்பயணம், இன்று வரை அலைகள் ஓய்வதில்லை போல் ஓடி கொண்டே இருக்கிறது.
கமலுக்கு விருது
கடந்த 1960-இல் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்த கமலுக்கு ஜனாதிபதியின் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இதையடுத்து பாலசந்தர், பாரதிராஜா உள்ளிட்ட பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தார். இதுவரை தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படம் வசூலை அள்ளியது. இதில் அப்பா, மகன் ரோலில் வந்து தனது நடிப்பை அசத்தியிருப்பார்.
முக்கியமான படங்கள்
நாயகன், இந்தியா, ஹே ராம், தசாவதாரம், விருமாண்டி, விஸ்வரூபம் ஆகிய படங்கள் முக்கிய படங்களாகும். அதில் தசாவதாரத்தில் 10 வேடங்கள் கமல் நடித்துள்ளார். கமல் கடந்த 1979-இல் கலைமாமணி, 1990-இல் பத்மஸ்ரீ, 2014-இல் பத்விபூஷன், 2016-இல் செவாலியர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். சிவாஜி கணேசனுக்கு பிறகு செவாலியே விருது வாங்கியவர் கமல்.
நாட்டை விட்டே சென்றுவிடுவேன்
கடந்த 2014-இல் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக கமல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் நாட்டை விட்டே சென்றுவிடுவேன் என்று தெரிவித்தார். இதெல்லாம் தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின.
தமிழகத்தில் ஊழல்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடைக்கிறது என்று முதல் முறையாக அரசுக்கு எதிராக கொந்தளித்தார். இதைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். அரசியல் முள்படுக்கை அதில் வந்தால்தான் அனைத்தும் தெரியும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி கூறிவந்தார். இதைத் தொடர்ந்து அந்த அவதராத்தையும் கமல் தற்போது எடுத்து விட்டார்.
மொழி மலையாளம்
கடந்த 2016-இல் கமலுக்கு செவாலியர் விருது கிடைத்தவுடன் அதற்கு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எந்த ஒரு வாழ்த்தை அரசு சார்பில் தெரிவிக்கவில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயனோ கமலுக்கு வாழ்த்தினார். அதற்கு கமல் தனது முதல்வர் பினராயி விஜயன் என்றும் தனது மொழி மலையாளம் என்றும் டுவிட்டரில் பதிவு செய்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
மக்கள் நலனுக்காக
அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் கமல் தனக்கு பிடித்தவர்களான நல்லகண்ணு, ரஜினிகாந்த், கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து ஆசிகளையும் வாழ்த்துகளையும் பெற்றார். அவரது கட்சியின் ஸ்லோகன் நாளை நமதே ஆகும். இதில் விவசாயம், கல்வி, மீனவர்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கமல் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக http://naalainamadhe.maiam.com/ என்ற இணையதளம் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.
அரசியல் பயணம்
நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொள்கைகள், நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்க இருக்கிறார். ராமேஸ்வரம் வந்த கமலை பார்க்க ஏராளமான மீனவர்கள் குவிந்தனர்.