மதுரையில் பிறந்தது கமலின் புது கட்சி.. மக்கள் நீதி மய்யம்!
Recommended Video
மதுரை: மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திருமண மண்டபத்தில் மீனவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.
அப்போது கமலை நம்பிக்கை நட்சத்திரமாக பார்ப்பதாக, மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த வந்த கமல், தான் சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு என்றார். மேலும் அதை பாதுகாப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
பின்னர் மதுரைக்கு செல்லும் வழியில், சொந்த ஊரான பரமக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கும் சென்றார். அங்கு அவர் பேசுவதற்காக மேடைகள் அமைக்கப்பட்டும் அவர் நேரமின்மை காரணமாக வேனிலேயே பேசினார்.
இதை தொடர்ந்து மதுரை வந்த கமல், அங்கு ஏற்கனவே வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்றபடி, அவருடன் ஒத்தகடை மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்தார். கட்சிக் கொடியேற்றினார்.
மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.