மதம் குறித்து அவதூறு பேச்சு.. வழக்கை ரத்து செய்யக் கோரி ஹைகோர்ட் மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு
மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக தொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் கமல்ஹாசன் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரை: மகாபாரதம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி நடிகர் கமல் ஹாஸன் மீது வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் கடந்த மார்ச் 21ம் தேதி வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் கமலஹாசன் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக வரும் 5-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராகும்படி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவதூறு வழக்கை ரத்துக்கோரியும், இந்த வழக்கில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கோரியும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.