கட்சியின் பெயரிலேயே மக்களுக்கு நீதியா... அசத்தும் கமல்
Recommended Video
மதுரை: வழக்கம் போல் அரைத்த மாவையே அரைக்காமல் கமல் தனது கட்சிக்கு வித்தியாசமான பெயரை சூட்டியுள்ளார். அதே சமயத்தில் அது மக்களை கவரும் விதமாகவும் இருக்கும்.
வயதுக்கு வந்தபோதிலிருந்தே தான் ஒரு அரசியல்வாதி என்று அடிக்கடி கூறிவந்த கமல் இன்று தனிக்கட்சியை தொடங்கிவைத்துவிட்டார்.
இதற்காக இன்று காலை அப்துல்கலாம் வீட்டிலிருந்து அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகியவற்றில் பேசினார்.
பின்னர் மாலை 7.15 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அழைத்து கொண்டு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்தார்.
முதலில் கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை தொடங்கினார். பெயரிலேயே மக்களுக்கு நீதி வழங்குவது என்பதை உணர்த்துவது போல் உள்ளது.
வழக்கம் போல் கட்சி என்றால் எப்போதும் தேசியம், கழகம், திராவிசம் ஆகியவற்றையே இணைந்து பெயராக வைப்பர். ஆனால் கமல் அனைத்திலும் வித்தியாசப்படும் நபராக தற்போது கட்சியின் பெயரிலும் வித்தியாசத்தை காட்டியுள்ளார்.
இதுவரை மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு கட்சியின் பெயர் உள்ளது. பெயரிலேயே நீதி என்பதால் மக்களுக்கும் ஒரு பிடிப்பு ஏற்படும். ஒரு நம்பகத் தன்மை ஏற்படும். முதல்முறையாக புதுமையான கட்சி மலர்ந்துள்ளது.
இதன் கொள்கைகளும் மக்களுக்கானது என்றால் சந்தேகமே இல்லை, மக்கள் நிச்சயம் கமலின் கட்சியை ஏற்றுக் கொள்ள கூடிய தருணம் ஒரு நாள் வரும். திராவிட கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு மக்கள் ஏமார்ந்து போனதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த பெயர் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதில் சந்தேகமில்லை.