நல்லகண்ணுவை சந்தித்தது ஏன்? கமல் சொன்ன காரணம்
ஆதர்ஷ தலைவர்களில் நல்லக்கண்ணுவும் ஒருவர் என்பதால் அவரை சந்தித்தேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: நல்லக்கண்ணுவை தான் ஏன் சந்தித்தேன் என்பது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாகவும் தனிக் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் அவர் தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் அமெரிக்காவில் தமிழர்களை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சந்தித்து வந்தார்.
கமல் சந்திப்பு
கமல்ஹாசன் நேற்றைய தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமது கட்சியின் பெயரை பதிவு செய்வது தொடர்பாக சேஷனிடம் கமல்ஹாசன் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லக்கண்ணு வீட்டில் கமல்
இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவை கமல் சந்தித்து பேசினார். அப்போது கமல் தான் தொடங்கிவிருக்கும் கட்சி குறித்து பேசினார்.
மதிக்கும் மனிதர்
இந்த சந்திப்பு குறித்து கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆதர்ஷ தலைவர்களை சந்தித்து வரும் தலைவர்கள் வரிசையில் நல்லக்கண்ணுவை சந்தித்தேன். நான் மதிக்கும் மனிதர்களை சந்தித்து வருகிறேன்.
எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதால் அவரை சந்தித்தேன். மக்களுக்காக சேவை செய்து, நேர்மையானவர் என்பதாலும் அவரை சந்திதேதன். நல்லக்கண்ணு என்றில்லை, மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை சந்தித்து மதிப்பளிப்பேன்.
இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்ல மற்ற அனைவரையும் சந்திப்பேன். மதுரையில் நடைபெறும் பொது கூட்டத்துக்கு நல்லக்கண்ணுவை அழைத்துள்ளேன் என்று கமல் தெரிவித்தார்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
இதுகுறித்து நல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் கட்சி குறித்து என்னுடன் கமல் ஆலோசனை நடத்தவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாகவே அவர் என்னை சந்தித்தார் என்றார் நல்லக்கண்ணு.