அதிமுக அமைச்சர்களை கதி கலங்க வைத்த கமல்ஹாசனின் டுவீட்ஸ்- பிளாஷ்பேக் 2017
அதிமுக அரசை கண்டித்து கமல்ஹாசன் போட்ட டுவீட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
சென்னை : அதிமுக அரசையும் அதன் ஆட்சியாளர்களையும் கண்டித்து கமல் போட்ட அதிரடி டுவிட்டர் பதிவுகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
கிட்டதட்ட டுவிட்டர்காரர் , டுவிட்டர் அரசியல்வாதி என்று பெயர் எடுத்தவர் கமல்ஹாசன். இதற்கு முழு காரணம், எந்த கருத்தையும் நேரடியாக சொல்லாமல் நடுநிசியில் டுவிட்டரில் போட்டுவிடுவதே ஆகும்.
தமிழகத்தில் ஊழல் பிரச்சினை தொடங்கி நீட் தேர்வு வரை அனைத்து கருத்துகளையும் டுவிட்டரில் போட்டார். அவர் போட்ட டுவீட்டுகளில் பெரும் சர்ச்சை கிளப்பியவை ஒரு பார்வை.
|
ஊழலை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்
A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்ப்பணம் என்று டுவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன் தங்கள் பகுதிகளில் நடக்கும் ஊழல்களை ஆதாரத்துடன் அமைச்சர்கள் இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் என்று கூறியிருந்தார்.
|
சூளுரைக்க...
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம் என்று
சுதந்திரம் பெற்றாலும் நாட்டில் ஊழலில் இருந்து நாம் சுதந்திரம் பெறவில்லை என்று கமல் டுவீட்டியிருந்தார்.
|
விடை காண வேண்டும்
Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை.இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம்.வெகுளாதீர்.மதி நீதியையும் வெல்லும் என்று நீட் தேர்வை ரத்து செய்ய கோரியிருந்தார்.
|
அரசு ராஜினாமா
செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும் என்று கூறி டெங்குவை கட்டுப்படுத்தாத தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
|
மலட்டுத் தன்மை
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என்று கமல் கூறியிருந்தார். நில வேம்பு குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என்று கூறி நில வேம்பு குடிநீரை நிறுத்த கூறியிருந்தது வழக்கு தொடுக்கும் அளவுக்கு சென்றது.
|
எண்ணூர் கழிமுகம்
தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழுவிவரம் கீழே என்று கூறி எண்ணூர் கழிமுகத்தில் வல்லூர் அனல் மின் நிலையம் ஆக்கிரமித்து சாம்பல் கழிவுகளை கொட்டி வருவதை கமல் சுட்டி காட்டினார்.
|
மக்களே நடுவர்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் என்று போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமான வரித் துறை ரெய்டு குறித்து கூறியிருந்தார்.