தமிழகம் முழுக்க பொதுக்கூட்டங்களில் உரை, மக்களுடன் சந்திப்பு.. கமல்ஹாசனின் அதிரடி திட்டம்
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், நாளை மறுநாள் அவர் தனது சுற்றுப் பயண விவரத்தை அறிவிக்க உள்ளார்.
தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை மனதில் வைத்து நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்கள். தமிழகம் மோசமான நிலையில் இருப்பதால் அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினிகாந்த் சமீபத்தில் அறிவித்தார். அவருக்கு முன்பாகவே, தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் கமல்.
ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் போன்ற தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
ரஜினிகாந்த் தீவிரம்
ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் வெப்சைட்டில் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணி நடக்கிறது. செல்போன் ஆப் மூலமாகவும் இதில் ஆள் சேர்ப்பு நடைபெறு கிறது. இதேபோல கமல்ஹாசன், விசில் மையம் என்ற பெயரில் ஊழலுக்கு எதிராக 'விசில் ஊத' மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென கமல் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
சுற்றுப்பயணம் செய்யும் கமல்
அதாவது ஜனவரி 26ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவர் அறிவித்தார். அதுகுறித்த விவரங்களை ஜனவரி 18ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்தார். எனவே நாளை மறுநாள் அவர் என்ன மாதிரி பயண திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்று அறிவதற்காக மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் ஆலோசனை
தனது சுற்றுப்பயணத்தின் போது ரசிகர்கள், பொது மக்களை கமல் சந்தித்து உரையாட உள்ளாராம். பொதுக்கூட்டங்களிலும் பேச திட்டமிட்டுள்ளாராம். தங்கும் ஹோட்டல்களில், ரசிகர்களை முதலில் சந்திக்கும் கமல், பின்னர் பொதுமக்களை நேரில் சென்று சந்திக்க உள்ளார். சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பது பற்றி விசாரிக்க ரசிகர்களுக்கு கமல் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுப் பயணம்
தனது சுற்றுப்பயணத்தின்போது, அந்த பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். சுற்றுப்பயணத்தை எங்கிருந்து தொடங்குவது? எந்த வகையில் பொதுமக்களை சந்திப்பது என்பது பற்றிய விவரங்களை கமல் அறிவிக்கும்போது இதுகுறித்து முழுமையாக தெரியவரும் என்பதால் கமல்ரசிகர்கள், வியாழக்கிழமைக்காக காத்திருக்கிறார்கள்.