அப்துல்கலாம் பெயரையும் புகழையும் வைத்து அரசியல் செய்வதா?: கமலஹாசனுக்கு அர்ஜூன் சம்பத் கண்டனம்
கலாம் பெயரையும் புகழையும் வைத்து அரசியல் செய்வதா என்று கமலஹாசனுக்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் : அப்துல்கலாம் பெயரையும், புகழையும் மட்டும் பயன்படுத்தி கமலஹாசன் அரசியல் செய்ய நினைப்பது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்க்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார்.
இந்து மக்கள் மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று திண்டுக்கல்லில் திருமணவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, கமலஹாசன் அரசியல் அறிவிப்பு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. பேருந்துகட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள பஸ் கட்டணம் உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைச்சர்கள் இதனை நியாயப்படுத்த மட்டுமே பார்க்கின்றனர். பொதுமக்களை அவர்களை கண்டுகொள்ளவே இல்லை என்று குறிப்பிட்டார்.
கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியல் குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் தொடங்க உள்ள ஆன்மீக அரசியலுக்கு நாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளோம். கமல் தனது அரசியல் பயணத்தை அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து தொடங்குவதாக அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது.
அப்துல்கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி. தமிழகத்தில் மீத்தேன், கூடங்குளம், அணுஉலை திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். அவர் இருக்கும்வரை இதைப்பற்றி எல்லாம் வாய் திறக்காத கமல் இப்போது அவரது பெயரையும், புகழையும் கொண்டு அரசியல் செய்ய நினைக்கிறார். இது கண்டிக்கத்து என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவில் இதுவரை மூன்று மாநிலங்களில் பத்மாவத் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளனர்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் பற்றி படம் எடுத்தால் அந்த சர்ச்சையை விளக்குவதற்காக அவர்களிடம் படம் திரையிடப்பட்டு காட்டப்படுகிறது. அதேபோல் பத்மாவத் திரைப்படத்தையும் தமிழகத்தில் திரையிடுவதற்கு முன்பாக எங்களிடம் காட்ட வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் குறிப்பிட்டார்.