நடிகர்கள் சத்யராஜூக்கும் கமலுக்கும் பணத்தை பற்றி மட்டும் தான் கவலையாம்.. எச்.ராஜா பாய்ச்சல்!
நடிகர்கள் சத்யராஜும் கமல்ஹாசனும் பணத்தை பற்றி மட்டும்தான் கவலை கொள்கிறார்கள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: நடிகர்கள் சத்யராஜும் கமல்ஹாசனும் பணத்தை பற்றி மட்டும்தான் கவலை கொள்கிறார்கள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் தமிழ் பற்றும் தமிழர்கள் மீது அன்பும் மேலோட்டமானது தான் என்றும் எச்.ராஜா சாடியுள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்சனைக்கு ஆதரவாக கன்னடர்களை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை கண்டித்து அவர் பேசினார்.
அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கட்டப்பா கதாப்பாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.
|
சத்யராஜ்க்கு எதிர்ப்பு
இந்த படத்தை வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னடர்களுகுக்கு எதிராக பேசிய சத்யராஜ் நடித்த பாகுபலி - 2 படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய வெட்டுவால் நாகராஜ் தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மன்னிப்பு கேட்ட கட்டப்பா
சத்யராஜ்க்கு எதிராக வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகுபலி படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளிடம் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் சத்யராஜ்.
பல்வேறு தரப்பு கண்டனம்
தான் ஒருவனுக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். சத்யராஜ் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பணத்தை பற்றி மட்டும்தான் கவலை
இந்நிலையில் இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சத்யாராஜம் கமலும் பணத்தை பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவர்களின் தமிழ் பற்றும் தமிழர்கள் மீதான அன்பும் மேலோட்டமானது தான் என்றும் எச்.ராஜா சாடியுள்ளார்.