சபாஷ்.. கட்சி பேருக்காகவே கமலை எழுந்து நின்று பாராட்ட வேண்டும்!
Recommended Video
சென்னை: போலித்தனம் இல்லாத ஒரு சுத்தமான மாற்றத்தை அதிரடியாக கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். கட்சிப் பெயரிலேயே அவர் புதுமையை புகுத்தி விட்டார்.
கழகம், திராவிடம், தேசியம் என்று ஊறி ஊறி அமிழ்ந்து போன தமிழக மக்களுக்கு கண்டிப்பாக இந்த பெயர் புரியாதுதான். ஆனால் மக்களை வழக்கமான கட்சிகளைப் போல ஏமாற்றாமல் பளிச்சென மனதில் பட்ட பெயரை, மக்களை உள்ளடக்கிய பெயரை வைத்துள்ள கமல்ஹாசன் எழுந்து நின்று பாராட்டப்பட வேண்டியவர்.
கழகம் என்று பெயர் வைக்காமல் எந்தக் கட்சியும் இங்கு பிறப்பதில்லை. கூடவே திராவிடம் இருக்கும் அல்லது தேசியம் இருக்கும். திராவிடம், தேசியம் என இரண்டையும் போட்டுக் குழப்பி பெயர் வைத்த கட்சியும் இங்கு உண்டு.
ஆனால் இதெல்லாம் மக்களுக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஒதுக்கி புறம் தள்ளி தூக்கிப் போட்டிருக்கிறார் கமல். துணிச்சல் தேவை இதற்கு. திராவிடம் என்று சொல்லி வரும் அவர் அந்தப் பெயரை கட்சியில் சேர்க்காமல் விட்டதிலேய அவரது தைரியம் புரிந்து போயிருக்கும் அனைவருக்கும்.
தமிழக மக்களுக்கு இந்த புதுமை அவசியமானது. காரணம் மாற்றம் இதிலிருந்து தொடங்குவதாக எண்ணிக் கொள்ளலாம். மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு, வழக்கமான கட்சியாக இது செயல்படாமல் வித்தியாசமான கட்சியாக, மக்களுக்கான கட்சியாக செயல்படக் கூடிய வாய்ப்புகள் தனது கட்சியில் அதிகம் என்பதையும் கமல்ஹாசன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மொத்தத்தில் கமல்ஹாசன் கட்சிப் பெயர் யாரும் எதிர்பாராதது.. ஆனால் பெரும் பாராட்டுதல்களுக்குரியது.. !