மன்னித்துவிடு மகளே உனக்கான பாதுகாப்பை நாடு தரவில்லை... கமல் கண்டனம்! #Justiceforkatuavictim
8 வயது சிறுமி படுகொலைக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : 8 வயது காஷ்மீர் சிறுமி படுகொலைக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவள் என்னுடைய மகள் இல்லை, ஆனால் ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக அந்தச் சிறுமியை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க போராடுவேன் என்றும் கமல் ட்வீட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கோவிலுக்குள் அடைத்துவைத்து சிறுமிக்கு உணவு கொடுக்காமல் சிறுவன், அரசு ஊழியர் உள்பட 8 பேர் சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்து இறுதியில் அந்த சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசிஎறிந்துள்ளனர். காஷ்மீர் சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அந்தச் சிறுமி உங்களுடைய சொந்த மகள் என்ற புரிதல் கூட ஏற்படவில்லையா. அவள் என்னுடைய மகள் இல்லை, ஆனால் ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக அவளை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது. மன்னித்துவிடு மகளே இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை. உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன், குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வராமல் இருக்க போராடுவேன். உனக்காக துயரப்படுகிறேன், என்றுமே உன்னை மறக்கமாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.