மனிதக்கழிவை அகற்ற ரோபாவை அறிமுகம் செய்த கேரளா... சபாஷ் போடும் கமல்!
மனிதக் கழிவுகளை அகற்ற நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் ரோபோவை அறிமுகம் செய்திருப்பதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை : மனிதக் கழிவுகளை அகற்ற நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் ரோபோவை அறிமுகம் செய்திருப்பதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். சக மனிதன் மீது நமக்கு இருக்கும் மரியாதையையைம் சுயமரியாதையையும் இது பல படி உயர்த்தி இருக்கிறது என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் முதன்முதலில் அரசியலுக்கு வருவதாக பேச்சுகள் கிளம்பிய போது அவர் சந்தித்தது கேரள முதல்வர் பினராயி விஜயனை. பினராயி விஜயனின் வீட்டில் சந்தித்து அரசியல் குறித்து ஆலோசனை பெற்றதோடு அவருடன் மதிய உணவும் சாப்பிட்டார்.
தொடர்ந்து தனது அரசியலில் பினராயி விஜயனுக்கு கமல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தனது கட்சியின் பெயரை அறிமுகம் செய்து வைத்த மதுரைக் கூட்டத்தில் கூட பினராயி விஜயன் கமலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வீடியோ ஒளிபரப்பானது.
கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற.
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2018
இந்நிலையில் கமல்ஹாசன் டுவிட்டரில் இன்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
தமிழகத்திலும் நீண்ட காலமாகவே மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் அவலத்தை எதிர்த்து போராட்டங்களும் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் செயலை கமல் முன் உதாரணம் காட்டி இருப்பதும் தமிழகமும் இதைச் செய்யலாமே என்று மறைமுகமாக கேள்வி எழுப்புவதாவே உள்ளது.