அரசியல் எங்களை பிரிக்கும்... ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து!
திரைப்படமானாலும் அரசியலானாலும் ரஜினியின் பாணி வேறு தனது பாணி வேறு என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : ரஜினி தொடங்க உள்ள அரசியல் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் மய்யம் கட்சியின் ஒவ்வொரு அசைவுகளும் உற்றுநோக்கி பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் திரைப்படமானாலும் அரசியலானாலும் தன்னுடைய பாணி வேறு ரஜினியின் பாணி வேறு என்று கமல் கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது : ரஜினியின் அரசியல் பார்வை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால் நான் எந்த பக்கத்தையும் சாராதவன்.
எனக்கு மதம் கிடையாது, மதத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. நான் நம்புவதெல்லாம் நல்லுறவை வளர்ப்பது மட்டுமே என்று கூறியுள்ளார். ரஜினியின் ஆன்மிக அரசியலை மறைமுகமாக கமல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
அரசியல் வருகையால் உங்கள் இருவருக்கும் இடையே இனி வரும் காலங்களில் பிரிவு ஏற்படும் என்று கருதுகிறீர்களா என்று கமலிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் நிச்சயமாக பிரிவு ஏற்படும் என்றார்.
திரைப்படங்களிலேயே இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ரஜினியின் திரைப்பட பாணி என்பது வேறு விதமானவை, அத்தகைய திரைப்படங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ரஜினி நடிக்கும் படங்களைப் போல நடிக்க எப்போதுமே விரும்பியதில்லை.
அதே போன்று தான் நான் நடிக்கும் திரைப்படங்கள் போல ரஜினி நடிப்பதில்லை. தொழில் ரீதியாக நடிக்கும் திரைப்படங்களிலேயே இப்படி என்றால் அரசியலும் நிச்சயம் எங்களை பிரிக்கும். அதற்காக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என நான் கூறவில்லை என்றும் கமல் கூறியுள்ளார்.