நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்.. கமல்ஹாசன்
மாணவர்களின் எதிர்காலம் குறித்தது என்பதால் நீட் தேர்வு விலக்கு குறித்து உடனடியாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் டுவீட்டியுள்ளார்.
சென்னை : மாணவர்கள் எதிர்காலம் பற்றியது என்பதால் நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து காலம் தாழ்த்தாமல் உடனே பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலா என்பதில் இன்னும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை. நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தடை விதிக்காமல் முடித்து வைக்கப்பட்டுவிட்டன.
தமிழக அரசின் 85 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது, சுப்ரீம் கோர்ட்டும் இந்த தடையை நீக்கவில்லை.
இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கும் என்று தமிழக மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை, அவசர சட்டம் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.
நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2017
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், மாணவர் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என்று அதிரடியாக டுவீட்டியுள்ளார்.