கஜானாவை நிரப்பிக் கொண்டு தான் அரசியலுக்கே வருகிறார்கள்... கமலை தாக்கும் தமிழிசை!
கஜானாவை நிரப்பிக் கொண்டு தான் புதியவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார்.
சென்னை : கஜானாவை நிரப்பிக் கொண்டு தான் புதியவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார்.
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல் தங்களின் பயணம் மற்றவர்களைப் போல கஜானாவை நோக்கிய பயணமல்ல என்று நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசினார். மக்களின் முன்னேற்றத்தை நோக்கிய பயணம் என்பதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் கமல் நம்பிக்கையோடு பேசினார்.
இந்நிலையில் நடிகர் கமலின் கஜானாவை நோக்கிய பயணமல்ல என்ற கருத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள், அரசியலில் இருப்பவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
மாற்றம் யாரால் வரும்
திராவிடக் கட்சிகளால் ஊழல் மலிந்திருக்கிறது, ஒரு மாற்ற்ததை கொண்டு வரவேண்டுமென்றால் மறுபடியும் தமிழக மக்கள் பரிசோதனைக் களமாக முடியாது. தமிழகத்தில் ஏற்கனவே மத்தியில் இருக்கும் ஒரு ஆட்சியால் தான் இங்கு மாற்றத்தை கொண்டு வர முடியும்.
அரசியலில் கிளம்பும் புதியவர்கள்
ஏனென்றால் இன்று பல பேர் அரசியலில் கிளம்பி இருக்கிறார்கள். சுற்றுப்பயணம் செய்வதாகச் சொல்கிறார்கள், சுற்றுப்பயணம் செய்யட்டும் அதில் தவறில்லை. ஆனால் கஜானா எனக்கு குறிக்கோள் அல்ல என்று ஒருவர் சொல்கிறார்.
திரைப்படங்களால் கஜானா நிரப்பியவர்கள்
வாழ்நாளில் பாதிநாளை திரைப்படங்கள் மூலம் தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டவர்கள், இன்று கஜானா குறிக்கோளல்ல என்று செல்வதையெல்லாம் தமிழக மக்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்று ஒன்று கொண்டுவரமுடியும் என்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும்.
தமிழகம் காவிமயமாகும்
இந்தியாவில் 65% காவிமயமாகி விட்டது, தமிழகம் விரைவில் காவிமயமாகும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். ஆர்கே நகர் தேர்தலின் போதே தமிழகத்தில் நிச்சயம் தாமரை மலரும் என்று சொல்லி இருந்தார் தமிழிசை, ஆனால் பாஜக நோட்டாவால் பின்னுக்குத் தள்ளப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.