மழை பாதிப்பு... பள்ளிக்கரணையில் கமல் ஆப்சென்ட், விஜயகாந்த் விசிட்
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் விஜயகாந்த் ஆய்வு மேற்கொண்டு ஆறுதல் கூறினார்.
சென்னை : மழையால் பள்ளிக்கரணைப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கமல் வராத நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டார்.
கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் சில நேரங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதியில் நீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் விழாவில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டப்போவதில்லை கால்வாய் வெட்ட வேண்டும் என்று பேசி இருந்தார். அவரது பிறந்த நாளான இன்று காலை ஆவடியில் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தார். அதன் பின்பு பள்ளிக்கரணை நாராயண புரம் பகுதியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதாக இருந்தது.
வராத கமல், வந்த விஜயகாந்த்
ஆனால், திடீரென்று காலையில் இருந்து மழை பெய்ய ஆரம்பித்ததால், கமலஹாசனின் பள்ளிக்கரணை விசிட் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே சமயம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று
பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
விஜயகாந்த் ராக்ஸ்
கடந்த சில மாதங்களாக விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அது அவரது பேச்சிலும், நடவடிக்கைகளிலும் தெரிந்தது. இதனால் அவரது தொண்டர்கள் உற்சாகமிழந்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். இதனால் மீண்டும் பழைய விஜயகாந்த் ஆக மாறி வருவதாக அவரது தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
பள்ளிக்கரணையில் விஜயகாந்த்
தொண்டர்களின் தோளில் கை போட்டபடி பள்ளிக்கரணை பகுதி, நாராயணபுரம் ஏரி ஆகியவற்றின் பாதிப்பு குறித்து பார்வையிட்டார் விஜயகாந்த். அவரோடு அவரது மனைவி பிரமலதாவும் வந்திருந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்,ஏரி தூர்வாருவதற்கு தமிழக அரசு ஒதுக்கியதாக கூறப்படும் 400 கோடி
ரூபாய் எங்கே போனது? அதை அமைச்சர்களே எடுத்துக்கொண்டார்களா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் அரசியல் குறித்து
நடிகர் கமலஹாசனின் அரசியல் குறித்தும், அவரோடு கூட்டணி குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு, கமல் கட்சி தொடங்கட்டும் அதற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். அவரோடு மேலும் 10 பேர் கட்சி தொடங்க வந்தால் அதையும்
வரவேற்பேன். ஆனால், முதலில் கட்சியை தொடங்கி மக்களின் அபிமானத்தை பெறட்டும். அதன் பிறகு கூட்டணி வைப்பதை பற்றி பேசலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.