எண்ணூர் பிரச்சினையில் கமலின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது... அமைச்சர் மாஃபா கருத்து
நடிகர் கமல்ஹாசன் எங்களுக்கு எதிரி அல்ல என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.
Recommended Video
சென்னை : நடிகர் கமல்ஹாசன் எங்களுக்கு எதிரி அல்ல என்றும் அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக ஆட்சியாளர்கள் மீது நேரடியாக நடிகர் கமல் தாக்கி பேசினார். இதற்கு அமைச்சர்கள் பதில் கொடுத்தனர். மேலும் அரசியலுக்கு வந்தால்தான் அது எத்தகைய முள்படுக்கை என்பதும் தெரிய வரும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைகாட்சி சேனலில் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
கமல் குறித்து மாஃபா கருத்து
அப்போது அவர் பேசுகையில், நானும் ஓபிஎஸ்ஸும் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்றோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. அவர் வரட்டும். அவருக்கென்று ஒரு இடம் கிடைத்து அதை மக்கள் விரும்பினால் அவர் ஒரு தாக்கத்தை உருவாக்குவார்.
நல்ல நடிகர்
நாங்கள் அவரை எதிரியாக பார்க்கவில்லை. மக்கள் அறிந்த ஒரு மனிதர். எங்கள் அரசு மீது அவர் தாக்கி பேசினால் அதை எதிர்கொள்ள நாங்களும் பதிலடி கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கத்தான் வேண்டும். எண்ணூர் அனல் மின் நிலைய கழிவுகள் குறித்த கமல் நேற்று பதிவிட்டிருந்தார்.
நாங்கள் வரவேற்கிறோம்
அதில் குறை சொல்லாமல் நீங்கள் நிறைவாக செய்தீர்கள் என்று சொல்வதற்கு ஒரு வாய்ப்பு என்று அந்த பிரச்சினை குறித்து பதிவிட்டிருந்தார். அதில் அரசை தாக்கும் தொனி இல்லை. அரசாங்கத்தின் கவனத்துக்கு ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையை முன்வைப்பதாக கருதுகிறோம்.
தவறில்லை
இதை நல்ல விஷயமாகவே நாங்கள் நினைக்கிறோம். எண்ணூர் பிரச்சினை குறித்து அதுதொடர்பான அமைச்சர் விவாதித்து வருகிறார். எனவே அப்பிரச்சினை குறித்து அவர் அறிக்கை விடுவார் என்றார் மாஃபா பாண்டியராஜன்.