கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்.. சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியே
சென்னை: அரசியல் தலைவர்களின் குரு என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை கடற்கரையில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர்களைத் தூவியும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954ஆம் ஆண்டு பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மையான ஆட்சி நடத்தினார்.
Paid floral tributes to Perunthalaivar Kamaraj ex @INCIndia President & ex CM of TN on his birthday. #HBDKamaraj pic.twitter.com/8Fap0xApi4
— EVKS Elangovan (@EVKSElangovan) July 15, 2016
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார்.
இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது.
பெருந்தலைவர் ஆட்சியில் தமிழகத்தில் பல பாலங்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏழைகள், விவசாயிகள், அமைப்புச்சார தொழிலாளர்கள், பெண்கள் வாழ்க்கை தரம் உயருவதற்கான புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு வரலாற்று காவியமாய் நிலைத்து நிற்கிறார். அவரின் பாதச்சுவடுகள் இன்று பலருக்கு அரசியலில் படிக்கட்டுகளாக அமைந்துள்ளது.
பெருந்தலைவர் #காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு @EVKSElangovan முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள். #HBDKamaraj pic.twitter.com/ryNyCccffp
— Tamil Nadu Congress (@TN_PCC) July 14, 2016
தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாததால் கட்சியில் கோஷ்டி மோதல் மேலும் அதிகரித்துள்ளது. காமராஜரின் 114வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் இமெயில் முகவரியிலிருந்து தனித்தனியாக ஊடகங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளரான மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா விடுத்துள்ள அழைப்பில், சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் அகில இந்தியச் செயலாளர் சின்னா ரெட்டி, இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்பார்கள். காலை 9.30 மணிக்கு ஜிம்கானா கிளப், 10.30 மணிக்கு தியாகராய நகர் காமராஜர் நினைவு இல்லம் ஆகிய இடங்களில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினருமான டி.யசோதா வெளியிட்டுள்ள செய்தியில், காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவித்திருந்தார். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட இரு கோஷ்டிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாமல் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.