பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்… கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு பங்கேற்றனர்.
விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதாக இருந்தது திடீரென ரத்தானது. அவருக்குப்பதிலாக மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பங்கேற்றுள்ளனர்.
இதனைமுன்னிட்டு காலையில் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று அங்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 10.30 மணிக்கு கே.வி.எஸ்., பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில், அதைக் கொண்டாடும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
கல்வி தந்த பெருந்தலைவருக்கு அவர் பிறந்த வீட்டில் அவர் பிறந்த நாளில் கல்வித்திருவிழா வணக்கங்கள்
Posted by Tamilisai Soundararajan on Tuesday, July 14, 2015
கல்வியில் மறுமலர்ச்சி
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருமை கர்மவீரர் காமராஜரையே சாரும். காமராஜர் விரும்பிய சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. இந்தக் கொள்கை விரைவில் செயல் வடிவம் பெற்று தமிழகத்தில் கல்வி மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு கர்ம வீரரின் பிறந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.