பெருந்தலைவர் காமராஜர் 112-வது பிறந்தநாள்: சிவகாசியில் ரத்த தானம்
சிவகாசி: காமராஜரின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 400க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர்கள் காமராஜருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஞாயிறன்று ரத்ததான முகாமினை 11வது ஆண்டாக வெற்றிகரமான நடத்தியுள்ளனர்.
அரசியல் தலைவர்களுக்கு குரு என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகத்தில் அவரது உருவப்படத்திற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
எளிமையின் நாயகர்
பெருந்தலைவர் காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி, விருதுநகர் என்றுஅழைக்கப்படும் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி நாடார்- சிவகாமி அம்மையாருக்கு புதல்வனாக பிறந்தார். 16 வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து அரசியல் பிரவேசம் கண்டார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த போதும் எளிமையான தலைவராக வாழ்ந்தார்.
கிங் மேக்கர் காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர், கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டவர். பண்டித நேருவின் மறைவிற்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்கு பிறகு இந்திராகாந்தியையும் பிரதமராக்கினார்.
பதவி மீது ஆசையற்ற காமராஜர்
பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல் நேருவின் வாரிசுக்கு அந்த தகுதியை அளித்ததும், இன்றும் காங்கிரஸ் கம்பீரமாக இருப்பதற்கு காரணமானவர் காமராஜரே!
கல்வியும், மதிய உணவுத் திட்டமும்
இவரது திட்டங்கள் இன்றும் அவரது பெயரை பறைசாற்றுகிறது. இலவச கல்வியையும், மதிய உணவு திட்டத்தையும் 1957-ம் ஆண்டிலேயே முதன் முறையாக உலகுக்கு கொண்டு வந்தது காமராஜரே!
காமராஜருக்கு அஞ்சலி
இன்றைய பெருந்தலைவர்களுக்கு வழிகாட்டுதலாக விளங்கும் இவரது திட்டங்கள் என்றுமே அழியாதது. இன்று பல அரசியல் தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆண்டுதோறும் ரத்ததானம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு, கடந்த 10 வருடமாக சிவகாசி வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ரத்ததான முகாம்
இந்த ஆண்டு கர்மவீரர் காமராஜரின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை -13 அன்று சிவகாசி வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில் 11-வது ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பெண்களும் பங்கேற்பு
இந்த முகாமில் 475 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில் பெண்கள் மட்டும் 77 பேர் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையற்றவர்கள் ரத்ததானம்
இந்த முகாமில் கண்பார்வை இல்லாதவர்களும் கலந்துக்கொண்டு ரத்த தானம் செய்தனர்.
மரக்கன்று பரிசு
ரத்த தானம் செய்த நபர்களுக்கு மரக்கன்று பரிசளிக்கப்பட்டது. இந்த ரத்ததான முகாமை காமராஜர் ரத்த தான குழுவும், சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தியுள்ளனர்.