தூத்துக்குடி: காமராஜர் சிலை உடைப்பால் பதற்றம், கடையடைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மர்மநபர்களால் காமராஜர் சிலை உடைக்கப்பட்டதால், காங்கிரஸ் மற்றும் நாடார் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி விஇ ரோட்டில் தீயணைப்பு நிலையம் தெற்கு காட்டான் ரோடு - விஇ ரோடு சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகே சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பில் காமராஜர் மார்பளவு சிலை வைக்கப்பட்டு இருந்தது. இதை மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் திறந்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் சிலையின் கூண்டு கண்ணாடிகளை உடைத்து காமராஜரின் தலையை உடைத்து எறிந்தனர். இதுகுறித்து அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு குவிந்தனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏவி சண்முகம் தலைமையில் காங்கிரசார் அங்கு தர்ணாவில் ஈடுபட்டனர். டவுண் ஏஎஸ்பி சந்திரகுமார், போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதற்கிடையே சிலை உடைக்கப்பட்டதாக தகவல் அறிந்த நாடார் அமைப்பினர் அங்கு குவிய தொடங்கினர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் அதிகரித்தது. இதற்கிடையே அங்கு குவிந்திருந்த இளைஞர்கள் சிலர் பல்வேறு தெருக்களுக்கு சென்று கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் தூத்துக்குடி விஇ ரோடு, டபிள்யூ ஜிசி ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையி்ல் உடைக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு பதிலாக புதிய சிலைகள் உடனடியாக வைக்க போலீசார் சம்மதித்தனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இருப்பினும், அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.