கம்பம் நகர அவைத்தலைவர் ராமன் அதிமுகவிலிருந்து நீக்கம்...பின்னணியில் நில விவகாரம்..
தேனி : கம்பம் நகர அவைத்தலைவரான ராமனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பம் நகர அவைத்தலைவராக இருந்தவர் ராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். பல போரட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்று வந்தவர்.
இந்த நிலையில் இவருக்கு சொந்தமான 4 செண்ட் நிலம் கம்பத்தில் உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஒரு செண்ட் நிலத்தை நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் ஓடை கட்டுவதற்கு ஆக்கிரமிப்பு செய்துகொண்டது.
இதுபற்றி மாவட்ட செயலாளரும், கம்பம் சேர்மனுமான சிவக்குமாரிடம் ராமன் புகார் செய்தார். ஆனால் இதுபற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. ராமன் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர் என்பதால் கண்டுகொள்ளவில்லை.
அப்படி இருந்தும் சர்வேயரை அழைத்து வந்து அளந்தும் கூட ராமன் இடம் தான் என்று உறுதி செய்யப்பட்டது. அப்படி இருந்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. சாக்கடை ஓடையையும் நகராட்சி மூடவில்லை.
இதுபற்றி கடந்த 12 ஆம் தேதி கம்பம் வந்த அமைச்சர் ஓ.பன்னீசெல்வத்திடம் நேரில் கூறி, ராமன் புகார் மனு கொடுத்திருந்தார். இவர் இப்படி புகார் கொடுத்ததால் அமைச்சரும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென கம்பம் நகர அவைத்தலைவரான ராமனை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ராமன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தேனி மாவட்ட அதிமுக மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.