பிரபல ரவுடி ஸ்ரீதரின் உடல் சென்னை வந்தது... இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது
பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை: பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இவரது உடலைப் பெற்றுக் கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் ஸ்ரீதர். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் மிகவும் பிரபல ரவுடி ஆவார். சரியாக ஒருவாரத்திற்கு முன்பு இவர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் இவர் இந்த மாதம் 4 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்த இவரது முழுப்பெயர் ஸ்ரீதர் தனபாலன் என்பதாகும். இவர் மீது கொலை, சாராய வழக்கு, நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இப்படி ஒரு முறை வெளியே வந்த இவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். பல வழக்குகளின் பேரில் தேடப்பட்டு வந்த ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானதையே அடுத்து போலீசார் அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சி எடுத்தனர்.
அதன்படி அவரது உடல் தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை கம்போடியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அவரது உடல் வந்து சேர்ந்தது. மேலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பவும் முடிவு செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ்.