காஞ்சி மடத்தை விட்டு ஓடியது, சங்கரராமன் கொலை- ஜெயேந்திரர் வாழ்வின் முக்கிய அத்தியாயங்கள்!
காஞ்சி சங்கர மடத்தைவிட்டு வெளியேறியது, சங்கரராமன் கொலை வழக்கு ஆகியவை காஞ்சி ஜெயேந்திரர் வாழ்வின் மிக முக்கிய அத்தியாயங்கள்.
Recommended Video
சென்னை: மறைந்த காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் 1980களின் மத்தியில் மடாதிபதிகளுக்கு உரிய தண்டத்தை வைத்துவிட்டு திடீரென வெளியேறி போய்விட்டார். அதேபோல் மடாதிபதியாக இருந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார்.
ஆதி சங்கரரால் திசைக்கு ஒன்றாக 4 மடங்கள் நிறுவப்பட்டன. இந்த அதிகாரப்பூர்வ சங்கர மடங்களில் காஞ்சி சங்கர மடம் இடம்பெறவில்லை.
கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த சங்கர மடம் பின்னர் காஞ்சிபுரத்துக்கு இடம் பெயர்ந்தது. காஞ்சி சங்கரமடாதிபதிகளை சங்கராச்சாரியர்களாக இதர அதிகாரப்பூர்வ சங்கர மடங்கள் அங்கீகரிப்பதும் இல்லை.
தண்டத்தை விட்டு ஓட்டம்
இன்று காலமான ஜெயேந்திரர் 1980களின் மத்தியில் மடாதிபதிகளுக்கே உரிய தண்டம் எனும் தடியை மடத்தில் வைத்துவிட்டு திடீரென மாயமானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீட்டகப்பட்ட ஜெயேந்திரர்
அப்போது மூத்த அரசியல் தலைவர்களாக இருந்தவர் இதில் தலையிட்டு ஜெயேந்திரரை கண்டுபிடித்து மீட்டு வந்தனர். அதிகாரப்பூர்வமற்ற சங்கர மடமாக இருந்தாலும் பல்வேறு தலைவர்களின் வருகையால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் காஞ்சி மடம் உருவானது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது
பின்னர் 2004-ம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசால் அதிரடியாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை சங்கர மடத்துக்குக் கொடுத்தது.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது
ஜெயேந்திரருடன் இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் குறித்த ஏராளமான வெளிவராத தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அடுத்தடுத்து புகார்கள்
மூத்த எழுத்தாளர் அனுராதா ரமணன், ஜெயேந்திரர் தம்மிடம் தவறாக நடக்க முயன்றார் என பகிரங்கமாக புகார் தெரிவித்தார். விஜயேந்திரருக்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பிருக்கிறது என்கிற தகவலும் அப்போது கசிந்து பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.