சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு- ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவு!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திரர் தலைமையிலான நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அரசுக்கு தொடர்ந்து புகார் கடிதங்கள் மூலம் சங்கரராமன் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில்தான் 2004ஆம் ஆண்டு சங்கரராமன் வரதராஜ பெருமாள் கோயிலிலேயே வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த வழக்கில் தொடக்கத்தில் போலி குற்றவாளிகள் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அவரது தம்பி ரகு உள்ளிட்ட சங்கரமட தலைமை நிர்வாகிகள் அனைவருக்குமே தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து யாருமே எதிர்பாராத வகையில் காஞ்சி சங்கராச்சாரியார்களை 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று தமிழக போலீசார் கைது செய்தனர்.
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஹிந்து மத நம்பிக்கைகளை தீவிரமாக நேசிக்கும் அரசியல் தலைவர்கள் சங்கராச்சாரியார்களை மதிப்பவர்கள். ஆனால் அப்படிப்பட்ட சங்கராச்சாரியாரையே ஜெயலலிதா கைது செய்தது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் சங்கராச்சாரியார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 9 ஆண்டு காலமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக புதுவை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது.
தற்போது சங்கராச்சாரியார்கள் விடுதலையாகி இருப்பதன் மூலம் பொய் வழக்கை போட்டார் முதல்வர் ஜெயலலிதா என்ற குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகி இருக்கிறார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.