சூப்பர் சீனியர் முதல் புதுமுகம் வரை.. திமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதுபெரும் திமுக வேட்பாளராக உத்திரமேரூரில் க. சுந்தர் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆலந்தூரில் மீண்டும் களம் கண்டுள்ளார்.
புதுமுக வேட்பாளராக ஆர்.டி.அரசு செய்யூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு களம் கண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா
தா.மோ. அன்பரசன்
ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தா.மோ. அன்பரசன். முன்னாள் அமைச்சரான அன்பரசன் பியூசி படித்தவர். குன்றத்தூர் சொந்த ஊராகும். கடந்த 2006 தேர்தலில் இவர் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு பா. வளர்மதியிடம் தோல்வியுற்றார். திமுகவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
எஸ்.ஆர்.ராஜா
தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ராஜா பன்முகம் கொண்டவர். நகைக் கடை, கட்டுமானத் தொழில் சப்ளை, முன்னாள் நகராட்சித் தலைவர் என வலம் வரும் இவர் தாம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் இவர்.
இ.கருணாநிதி
பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் இ.கருணாநிதி, தொண்டர்களால் இ.க. என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 58 வயதான இவர் பிஏ படித்தவர். முன்னாள் பல்லாரவம் நகராட்சித் தலைவர், தற்போது பல்லாவரம் நகர திமுக செயலாளராக இருக்கிறார்.
வரலட்சுமி மதுசூதனன்
செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் போட்டியிடுகிறார். இவர் ஆப்பூர் ஊராட்சித் தலைவராக இருந்து வந்தவர். அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளார். 10 வருடமாக இவர் ஊராட்.சித் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாதன்
திருப்போரூர் தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன் மாமல்லபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். திருப்போரூர் தொகுதியின் கீழ்தான் மாமல்லபுரம் வருகிறது. 2001ல் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர் விஸ்வநாதன். இப்போது திருப்போரூர் வந்துள்ளார். மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவராக இருந்தவர் விஸ்வநாதன். தற்போது மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார்.
சிவிஎம்பி எழிலரசன்
காஞ்சிபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எழிலரசன் பாலாறு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளார். பிஈ படித்துள்ளார் இவர். இவரது தந்தை பொன்மொழி மாவட்ட திமுக அவைத் தலைவராக இருக்கிறார்.
க.சுந்தர்
காஞ்சிபுரம் மாவட்டக் கழக அவைத் தலைவரும் உத்திரமேரூர் தொகுதியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தவருமான க.சுந்தர் மீண்டும் அதே தொகுதியில் களம் கண்டுள்ளார். 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, 1966 முதலாக இன்று வரை திமுகவில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சுந்தர். 1967-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவுக்காக தீவிரமாக பாடுபட்ட முன்னோடி. மாணவர் அணியில் இருந்தபோது 12 முறை சிறை சென்றவர்.
நெல்லிக்குப்பம் புகழேந்தி
மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் நெல்லிக்குப்பம் புகழேந்தி. திமுகவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டத் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட சொந்த ஊர் கடலூர் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஆர்.டி. அரசு, பி.டி.எஸ்.,எம்.ஏ., எல்.எல்.பி.
செய்யூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் டாக்டர் ஆர்.டி அரசு. பல் டாக்டரான இவர் வக்கீலுக்கும் படித்துள்ளார். இவருக்கு தேர்தல் களம் புதிதாகும். இப்போதுதான் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.